Monday 26 March 2012

தெளிவு குருவின் திருவடி!


ஒரு மெல்லிய போர்வையைத் தரை மீது விரித்து அதன் மேல் சோபாவில் சிலைபோன்று வீற்று இருந்த மோன உருவத்தை ஆவலுடன் நோக்கினேன்.  அகலம் குறைவான மெல்லிய கோவணத்தைத் தவிர வேறு ஆடை எதுவும் மகரிஷிகளின் உடல் மீது இல்லை.  ஆனால் இந்த பிரதேசங்களில் இது ஒன்றும் அசாதாரணமில்லை.  மகரிஷிகளின் சருமம் சற்றே செப்பு நிறமாக இருப்பினும் தென் இந்தியர்களைப் பார்க்கும் பொழுது அவர் நல்ல சிகப்பு என்றே சொல்லலாம்.  அவர் நல்ல உயரமென்றும் வயது ஐம்பதிர்க்குச் சற்று கூடுதலாக இருக்குமென்றும் தோன்றியது.  நரைமுடியுடைய அவரது சிரத்தின் அமைப்பு நல்ல திருத்தமாக இருந்தது அவரது தோற்றத்திற்கு அது ஒரு சீரிய சிந்தனையாளரின் பொலிவைத் தந்தது.  மொத்தத்தில் அங்க அமைப்பில் அவர் இந்தியர்களைக் காட்டிலும் ஐரோப்பியர் போன்றே காணப்பட்டார்.

ஹாலில் பூரண மௌனம் நிலவியது.  அமைதியே உருவாகச் சலனமேதுமின்றி நாங்கள் உள்ளே நுழைந்ததே தெரியாதோ என்னும்படி அந்த மாமுனிவர் அமர்ந்திருந்தார்.  சோபாவின் மறுபக்கத்தில் அன்பரொருவர் தரை மீது உட்கார்ந்திருந்தார்.  முனிவருக்கு மேலே கட்டி இருந்த காக்கித் துணியால் தைக்கப்பட்ட பங்காவை இந்த அன்பர் கயிற்றினால் இழுக்கத் தொடங்கினார்.  அது எழுப்பிய ஓசை அங்கு நிலவிய மௌனத்தைக் கலைத்தது.  பங்காவின் கிர் கிர் என்ற தாளத்தை கேட்டவாறே சோபா மீதிருந்த மகரிஷியின் கண்களின் மீது எனது கண்களை ஆவலுடன் பதித்து அவர் என்னைப் பார்ப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தேன்.  மிகப் பெரியதுமில்லாமல் சிறிதாகவும் இல்லாமல் பாந்தமாகவும், கரும்பழுப்பு நிறமாக் இருந்த அவரது கண்கள் அகலத் திறந்திருந்தன.

நான் வந்திருப்பது அவருக்குத் தெரியுமோ, தெரியாதோ, அதற்கான அடையாளம் ஏதும் மகரிஷிகளிடம் காணப்படவில்லை.  எந்த அசைவுமின்றி ஒரு அமானுஷ்ய அமைதியுடன், சிலையைப் போல் வீற்றிருந்தார்.  வெகு வெகு தொலைவை நோக்கி கால தேசங்களை வெட்டவெளியைக் கடந்த ஆனந்தமான ஒரு சேய்மையை தாண்டி அவரது பார்வை சென்றது.  நான் அவரது பார்வையில் படவில்லை.  இந்த அசாதரணமான காட்சியைப் போன்று எங்கேயோ ஒருமுறை பார்த்தது போலிருந்தது.  என் நினைவுப் பெட்டியை குடைந்தேன்.  இதுவரை கண்டவர்களை எல்லாம் ஒவ் ஒருவராக ஆராய்ந்தேன்.  கல்லில் செதுக்கியதுபோல் அசைவேதுமின்றி அமர்ந்திருந்த "பேச முனிவர்" நினைவுக்கு வந்தார்.  சென்னைக்கருகே ஒரு ஒதுக்குப் புறமான குடிசையில் கண்டேனே அந்த மௌனி.  இப்பொழுது மகரிஷியிடம் நான் காணும் அபூர்வமான தேகச் சலனமின்மை அந்த மௌனியின் சிலை போன்ற தன்மையை வினோதமான வகையில் ஒத்துள்ளது.

ஒரு மனிதருடைய கண்களின் மூலம் அவரது உள்ளக்கிடக்கையை அறிந்து பட்டியல் போட்டு விடலாமென நான் பல்லாண்டுகளாக நம்பி வந்துள்ளேன்.  ஆனாலோ, மகரிஷிகளின் முன்னர் நான் தயங்கித் திகைத்து வியந்து நின்றேன்.

சொன்னால் நம்ப முடியாத நிதானத்துடன் நிமிடங்கள் ஊர்ந்து சென்றன.  இப்படியாக அரை மணி நேரம் சென்றதை சுவற்றில் தொங்கிய ஆஸ்ரம கடிகாரம் அறிவித்தது.  இன்னும் நத்தை வேகத்தில் நேரம் ஊர்ந்து ஒரு மணி நேரம் கடந்தது.  யாருமே வாய் திறக்கவில்லை.  எனது கவனம் சோபாவில் மௌனமாக அமர்ந்திருந்த மகரிஷிகளிடம் ஒருமுகப்பட்டு விடவே அவரைத் தவிர அங்கிருந்த மற்ற எல்லோரையும் நான் முற்றிலும் மறந்து விட்டேன்.  அவர் முன்னிருந்த அழகிய சிறு மேஜை மீது நான் வைத்த பழங்கள் கவனிப்பாரின்றி இருந்தது.

சென்னையில் நான் பேசா முனிவரை சந்தித்தபோது எனக்கு கிடைத்த வரவேற்ப்பு போன்றே தமது குருநாதரிடமும் கிடைக்குமென்று என்னுடன் துணை வந்த துறவியார் முன்னரே எச்சரிக்கவில்லை ஆதலால், பூரண உதாசீனம் போல் தோன்றிய இந்த வினோதமான வரவேற்ப்பு எனக்குத் திகைப்பூட்டியது.  இந்தச் சூழ்நிலையில் எந்த மேற்கத்தியனும் "பக்தர்கள் கண்டு ரசிப்பதர்க்காகத்தான் இந்த மனிதர் இப்படி நாடகம் போடுகிறாரோ?" என்று தான் முதலில் நினைப்பான்.  இதே நினைப்பு ஓரிரு முறை என்னுள் எழவே செய்தது.  ஆனால் உடனேயே அதை உதறி விட்டேன்.  மகரிஷிகளுக்கு சமாதி நிலையில் ஆழ்ந்துவிடும் பழக்கமுண்டு என்று துறவியார் என்னிடம் கூறியிராதிருந்தாலும் அவர் நிச்சயமாக சமாதியில்தான் இருக்கிறார் என்று நினைத்தேன்.  அடுத்தபடியாக "பார்மார்த்திகமான இந்தத் த்யானம் வெறும் பொருள் அற்ற சூன்ய நிலை தானோ?" என்ற எண்ணம் எழுந்த கொஞ்ச நேரம் நிலைத்தது.  ஆனால் இதற்கு விடை கிடைக்காத காரணத்தினால் மட்டுமே இந்த எண்ணத்தையும் விட்டு விட்டேன்.

காந்தம் இரும்பைக் கவர்வதுபோல் இந்த மனிதரிடமுள்ள ஏதோ ஒரு சக்தி என் கவனத்தை ஈர்க்கிறது.  எனது பார்வையை அவரைவிட்டு அகற்ற இயலவில்லை இந்த அபூர்வமான ஈடுபாடு மென்மேலும் வலுப்படவே என்னை எறேடுத்துக்கூடப் பாராமல் உதாசீனமாக இருந்தது குறித்து எனக்கு ஏற்பட்ட  ஆரம்பத் திகைப்பும், குழப்பமும் மெல்ல மெல்ல மறைந்தன.  இந்த அதிசயமான காட்சி ஒரு மணி நேரம் நீடித்து இரண்டாவது மணி நேரம் கடந்து கொண்டிருக்கும் பொழுது தான் நான் எனது மனதினுள்  ஒரு அமைதியான எதிர்ப்பில்லாத மாறுதல் மௌனமாக திகழ்ந்து கொண்டிருப்பதை உணரத் துவங்குகிறேன்.  ரயிலில் வரும்போது மிகுந்த சிந்தனையுடனும் நுட்பகாகவும் திருத்தமாகவும் தயாரித்த கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக நழுவி மறைந்தன.  இப்பொழுது எனக்கு அக்கேள்விகளக் கேட்டாலும் கேட்க்காவிட்டாலும் ஒன்றுதான்.  இதுவரை என்னைத் தொந்தரவு செய்த பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் எனக்கு பரவாயில்லை.  எனக்கு தெரிந்ததெல்லாம் ஒன்று தான்; அமைதி என்னருகே ஆறாகப் பெருகி ஓடிக் கொண்டிருக்கிறது; மகத்தான சாந்தி என் இதயத்தினுள் ஆழப் பாய்ந்து பரவுகிறது; சிந்தனைகளால் சித்திரவதைப்பட்ட எனது மூளை ஒரு வழியாகச் சற்று ஓய்வு பெறத் துவங்குகிறது.

இவ்வளவு காலமாக கிளிப்பிள்ளை பேசுகிறதுபோல் நான் திரும்ப திரும்ப என்னிடமே கேட்டுக் கொண்டிருந்த அந்தக் கேள்விகளை நினைத்தால் சிரிப்பு வருகிறது.  அவற்றைக் கேட்க்காமலேயே இவரிடமிருந்து நொடிப் பொழுதில் விடைகள் கிடைத்து விடுகின்றனவே.  நான் வாழ்ந்த வாழ்வும், கண்ட காட்ச்சிகளும் இங்கு எவ்வளவு சிறியனவாகத் தோன்றுகின்றன!  இங்கே எனக்குத் திடீரென்று ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.  மனிதனின் புத்தி தனக்குத்தானே பிரச்சினைகளை உருவாகிக் கொண்டு, இல்லாத அப்பிரச்சினைகளுக்குப் பரிகாரம் காண்பதில் பேரல்லப் படுகிறது.  இதுவரை புத்தியே பிரதானமெனக் கருதி வந்த என்போல் ஒருவன் மனதில் இத்தகைய புதிய கருத்து புகுவது விந்தையே.

இவ்வாறு நிதானமாக், நிலையாக வலுப்பட்டு வந்த ஆழ்ந்த மன அமைதி என்னை ஆட்கொள்ள விட்டேன்.  இரண்டு மணி நேரம் இந்தச் சரணாகதியில் கழிந்தது.  காலவிரயமாகிறதே, காலம் கடந்து செல்கிறதே என்று மனதில் எரிச்சல் உண்டாகவில்லை.  ஏனெனில் மனது தனக்குத் தானே சிருஷ்டித்துக் கொண்ட பிரச்சினச் சங்கிலிகள் உடைத்து எறியப்படுவதை உணர்கிறேன்.  பிறகு மெல்ல மெல்ல, எனது நனவு மண்டலத்தில் ஒரு புதிய கேள்வி படர்கிறது.

மகரிஷி எனப்படும் இவர் ஆன்ம அமைதியைப் பரப்புவது ஒரு மலர் தனது இதழ்களிலிருந்து நறுமணத்தை வெளியே பரப்புவது போல் அவ்வளவு இயல்பானதா?  என்னால் ஆன்மீகத்தைப் புரிந்து கொள்ள முடியுமென்று நான் கருதவில்லை.  ஆனால் பிறருடைய சக்தியை, தகுதியை என்னால் உணர முடிகிறது.  என்னுள்ளே அறிவுக்கெட்டாத சூட்சமமான வகையில் அமைதி பரவுவதற்கு நான் இப்பொழுது இந்த இடத்தில் இருப்பதுதான் காரணம் என்று என் மனதில் ஒரு சந்தேகம் உதிக்கிறதென்றால் நான் மகரிஷியின் சாந்நித்ய சக்தியை என் இதயத்தினுள் புரிந்து கொள்ளத் துவங்கி விட்டேன் என்றே பொருள்.  துன்புற்றுக் குழம்பிக் கொந்தளிக்கும் எனது உள்ளத்தில் பாய்ந்து பரவும் அமைதி எதோ ஒரு அணுக்கதிர் போன்ற ஆன்மீக சக்தியால், இந்த்ரியங்களுக்கப்பாற்பட்ட யாருமறியாத ஒரு சூட்ச்சுமச் சக்தியால் இவரிடமிருந்துதான் கிளம்பி என்னை அடைகிறதோ என்று என்னுள் வியப்பு எழுந்தது.  ஆனால் இந்த மனிதரோ நான் ஒருத்தன் இருப்பதே தெரியாதவர் போல் முழுக்க முழுக்க ஒரு சிலயைப்போல் அமர்ந்திருக்கிறாரே.

 அந்த மோனக் கடலில் முதன் முதலாக ஒரு சிற்றலை எழுந்தது.  யாரோ ஒருவர் என்னிடம் வந்து என் காதில் மென்குரலில் கேட்டார்" "மகரிஷிடளிடம் கேள்வி கேட்க விரும்பினீர்கள் இல்லையா?"

நிமிர்ந்து பார்த்தேன்!

குருவின் திருவடி ...... தொடரும்!

Wednesday 21 March 2012

தெளிவு குருவின் திருவடி!


"இப்பொழுது தானே சொன்னேன்" என்று புன்னகையுடன் கூறினார்.

"அருணாச்சல" என்ற பெயரில் "அருண" "அசல" என்று இரு பதங்கள் உள்ளன.  "அருண" என்றால் சிவப்பு.  "அசல" என்றால் மலை.  அதாவது "செம்மலை".  இங்குள்ள பெரிய கோவிலில் எழுந்தருளியுள்ள தெய்வத்தின் பெயரும் இதுவேயாதளால் இச்சொல்லை "புனித செம்மலை" என்று மொழி பெயர்ப்பது சரியாகும்" என்றார்.

"இந்த மலைக்கும் தீபத்திற்கும் என்ன சம்பந்தம்?"  என்றேன்.

"அதுவா? வருடத்திற்கு ஒருமுறை கோயிலின் பிரம்மோத்சவத்தை குருக்கள் கொண்டாடுவார்.  கோயிலில் பஞ்ச மூர்த்திகளுக்கு தீபாராதனை காட்டும் அதே நேரத்தில் மலை உச்சியில் பெரிய தீபம் ஏற்றப்படும்.  அது எரிவது நெய், கர்பூரன்களால் நிறைக்கப்பட்ட ஒரு பெரிய கொப்பரையில்.  பல நாட்கள் தொடர்ந்து எரியும் இந்தத் தீபம், பல மைல்கள் தொலைவிலிருந்தும் கண்ணுக்குத் தெரியும்.  தீபம் தெரிந்த உடனேயே அதைத் தரிசிப்பவர்கள் அதன் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவார்கள்.  ஒரு பெறும் தெய்வத்தின் நிழலில் நிற்கும் இந்த மலை பவித்திரமானது என்ற மக்களின் நம்பிக்கையின் புறச்சின்னமே இந்த வணக்கம்".

எங்கள் முன் அருணாசலம் வானோங்கி உயர்ந்து நின்றது.  சிவப்பு, பழுப்பு, சாம்பல் நிறப் பாறைகள் நிறைந்ததும் முது போன்று தெள்ளிய வானில் சில ஆயிரம் அடிகளுக்கு மேல் தனது தட்டையான தலையைச் செலுத்திக் கொண்டும் தன்னந்தனியே நிமிர்ந்து நிற்கும் இந்த ஏகாந்தமான பர்வதத்திக்குச் சிற்பி செதுக்காத ஒரு தனி அழகும், காம்பிர்யாகும் இருப்பதை மறுக்க முடியாது.

துறவியின் சொற்கள் எண்ணை உணர்ச்சி வயப்படுத்தினவோ அல்லது எனக்குத் தெரியாத வேறு காரணத்தினாலோ என்னவோ அந்த பவித்திரமான மலையைத் தன்னை மறந்து நான் நோக்கியபொழுது, அருணாச்சலத்தின் சரிவான ஏற்றத்தை வியப்புடன் கண்ணால் பருகிய பொழுது ஒரு வினோதமான பய பக்தியும், பிரமிப்பும் என்னுள் எழுவதை உணர்ந்தேன்.

மெல்லிய குரலில் என் காதினுள் துறவி, "இந்த மலை இருக்கிறது பாருங்கள், இது யாவரும் போற்றும் புனிதப் பொருள் மட்டுமில்லை, இந்த பூலோகத்தின் அத்யாத்ம மையத்தைக் காட்டவே இந்த மலையைத் தேவர்கள் இங்கு எழுப்பியுள்ளார்கள் எனவும் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் நம்பி வருகிறார்கள், புராணங்களும் கூறுகின்றன" என்றார்.

மகரிஷியின் ஆஸ்ரமத்தை வண்டி நெருங்கியது.  சாலையை விட்டுத் திரும்பி மண்பாதை வழியாக வண்டி சென்றது.  தென்னை மற்றும் மாமரங்கள் நிரந்து அடர்ந்த ஒரு தொப்பை அடைந்தோம்.  அதையும் கடந்து சென்றால் ஒரு வாயிலருகே பாதை முடிவடைந்தது.  வாயில் மூடப்பட்டு இருந்தது, ஆனால் பூட்டப்படவில்லை.  வண்டிக்காரர் கீழே குதித்து வாயிலைத் தள்ளித் திறந்தார்.  பின் வண்டியிலேறி எங்களை ஒரு பெரிய முற்றத்திற்கு ஓட்டிச் சென்றார்.  இசிவேடுத்துப் போயிருந்த கை, கால்களை நீட்டி, மடக்கி சரி செய்து கொண்டு, தரையில் இறங்கி நாற்புறமும் கண்களை ஓட விட்டேன்.

ஒதுக்கமாய் அமைந்திருந்த மகரிஷிகளின் அருள் ராஜ்ஜியத்தின் பௌதீக எல்லைகள் இவைதான், முன் பகுதியில் நெருக்கமாக வளரும் மரங்கள் மற்றும் மிக அடர்த்தியான பூந்தோட்டம், பின் பகுதியிலும் கிழக்குப் பக்கத்திலும் சப்பாத்திகள்ளி மற்றும் புதர்களான வேலிகள்; மேற்க்கே காடாக வளர்ந்த புதர்கள், மரங்கள் செறிந்த வானமும், மழையின் அடிவாரத்தில் மிக ரமணீயமான சுட்ட்ருப்புறக் காட்ச்சியின் நடுவில் ஆஸ்ரமம் அமைந்துள்ளது.  மிகவும் ஆழ்ந்த தான வாழ்வு வாழ விழைபவர்களுக்கு இந்த ஏகாந்தமாக ஒதுங்கியுள்ள ஆஸ்ரமம் தகுந்த இடமாக இருக்க கூடும்.

முற்றத்தின் இடது புறத்தில் கூரை வேய்ந்த இரு சிறு கட்டிடங்கள் இருந்தன.  அதையடுத்து ஒரு நீண்ட சதுர வடிவ நவீன கட்டிடம், சிவப்பு ஓடுகள் வேய்ந்த கூரை. கூரை சுவர்களுக்கு வெளிப்புறம் சற்றுக் கீழே இறங்கியுள்ளது.  கட்டிடத்துக்கு முன் தளமிடப்பட்ட ஒரு சிறிய தாழ்வாரம்.

முற்றத்தின் மையத்தில் ஒரு பெரிய கிணறு.  சட்டை அணியாத ஒரு கருப்பு நிறம் கொண்ட சிறுவன் அதிலிருந்து மெதுவாக ஒரு வாளியில் தண்ணீரை இறைத்துக் கொண்டிருந்தான்.  வெளியே நாங்கள் வந்த சப்தம் கேட்டு சிலர் கட்டிடங்களிருந்து முட்ட்ரத்துக்கு வந்தனர்.  ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக உடை அணிந்திருந்தனர்.  ஒருவர் கோவணம் மட்டுமே அணிந்திருந்தார்.  நீங்கள் யார் என்று கேட்க்கும் தோரணையில் எல்லோரும் எங்களை உற்று பார்த்தனர்.  துறவிக்கு மிக உற்ச்சாகம், வாயெல்லாம் பல், அவர்களுடைய திகைப்பை இவர் மிகவும் ரசித்தார்.  அவர்களருகே சென்று தமிழில் என்னவோ சொன்னார்.  உடனே அவர்கள் முகங்களில் பெரிய மாறுதலேர்ப்பட்டது.முகங்கள் பிரகாசமாயின.  அனைவரும் மகிழ்ச்சியுடன் என்னைப் பார்த்தார்கள்.  எனக்கு அவர்களுடைய முக பாவங்களும் அவர்கள் நடந்து கொண்ட விதமும் மிகவும் பிடித்துப் போயின.

"போகலாம்! வாருங்கள்" என்றார் துறவி.

தாழ்வாரத்தின் வெளியே சற்று நின்றேன்.  பின் நான் காணிக்கையாகக் கொண்டு வந்திருந்த பழங்களைக் கையிலேந்திக் கொண்டு திறந்திருந்த கதவு வழியாக ஹாலுக்குள் நுழைந்தேன்.

சுமார் இருபது ஜோடிக் கண்கள் எங்கள் பக்கம் திரும்பின.  அவற்றின் சொந்தக்காரர்கள் தரையின் மீது அரை வட்டத்தில் அமர்ந்திருந்தனர்.  கடப்பாக் கற்கள் பதித்த கரும்பழுப்பு நிறத்துத் தரை.  அனைவரும் வலது பக்க ஓரத்திலிருந்து பவ்யமாகத் தள்ளியே உட்கார்ந்திருந்தனர்.  அவர்கள் அமர்ந்திருந்த டிக்கை நான் நோக்கினேன். 

அங்கே நீளமான வெள்ளை சோபாவில் ஒருவர் அமர்ந்திருந்தார்.

"இவர் தான் மகரிஷிகள், சந்தேகமே இல்லை" என்றது என் மனம்.

துறவியார் சோபாவை அணுகித் தரை மீது வீழ்ந்து வணங்கினார்.  கைகளை சேர்த்துத் தனது கண்களை அவற்றின் மேல் புதைத்தார்.

நாங்கள் ஹாலிற்குள் நுழைந்த திசையை, ஜன்னலின் வழியாக கண்ணிமைக்காது நோக்கிய வண்ணம் அமர்ந்திருந்தார் மகரிஷி.  காலை வெளிச்சம் மகரிஷிகள் மீது தெளிவாக படிந்திருந்தமையால் நான் அவரது முகத்தின் ஒவ்வொரு விவரத்தையும் மனதில் நன்கு குறித்துக் கொள்ள முடிந்தது.  அவர் தன் சிரத்தச் சற்றேனும் அசைக்கவில்லை.  எனவே அவரது கண் பரவில் விழும் எண்ணத்துடன் சோபாவின் அருகே அமைதியாகச் சென்றேன்.  பழங்களை அவர் முன் வினயமாக வைத்துவிட்டு இரண்டடி பின் சென்று நின்றேன்.

Wednesday 14 March 2012

தெளிவு குருவின் திருவடி!

தென் இந்திய ரயில்வேயின் சென்னை சந்திப்பிலிருந்து மணியும் நானும் சிலோன் போட் மெயிலில் ஏறி அமர்ந்தோம்.  பலமணி நேரங்களாக விதவிதமான காட்ச்சிகளை கடந்து புகை வண்டி உருண்டு ஓடியது.  வழி நெடுக நெல்வயல்களும், சின்னஞ்சிறு செம்மலைகளும், குளிர் நிழல் தரும் நெடிதுயர்ந்த தென்னந் தோப்புகளும், ஆங்காங்கு, நெல் வயல்களில் பாடுபட்டு உழைக்கும் விவசாயிகளுமாக காட்ச்சிகள் மாறி மாறித் தோன்றி மறைந்தன.

ஜன்னலருகில் அமர்ந்து நான் புறகாட்ச்சிகளைக் கண்களால் பருகிக் கொண்டிருக்கையில் சடுதியில் படரும் இந்திய மாலை இருள் புறக்காட்ச்சிகளை மறைத்தும், மனம் இதர சிந்தனையில் மூழ்கியது.  அந்த யோகி பிரம்மா கொடுத்த தங்க மோதிரத்தை அணிந்த நாள் முதற்கொண்டு எனக்கு நேர்ந்த வினோதமான சம்பவங்களை வியப்புடன் நினைவு கூர்ந்தேன்.  நான் போட்டிருந்த திட்டங்கள் மிகவும் மாறிவிட்டன.  எதிர்பாராத சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக உருவாக்கி கிழக்கே தொடர்ந்து செல்லும் எனது தீர்மானத்தை மாற்றி தென்திசையை நோக்கி என்னை அழைத்துச் செல்கின்றன.  இந்த தங்க மோதிரத்தில் பதித்துள்ள கல்லிற்கு ஒரு மர்மமான சக்தி உள்ளது என்று அந்த யோகி கூறியது உணமையாக இருக்குமோ என்ற எண்ணம் என்னுள் எழுந்தது.  எவ்வளவுதான் திறந்த மனத்துடன் இதை அணுக முயன்றாலும் தற்கால ரீதியில் சிந்தனை செய்து பழகிவிட்ட ஒரு மேலை நாட்டினனுக்கு இது போன்ற கருத்தை ஏற்பது கடினம் தான்.  இந்த பிரமையை மனதிலிருந்து உதறித் தள்ளினேன்.  ஆனாலும் எனதுள்ளே நிழலாடிய சந்தேகத்தை விரட்ட முடியவில்லை.  அருணை மலை ஆஸ்ரமத்தை நோக்கிச் செல்லும் எனது பயணம் ஒரு வினோதமான சக்தியின் வேலையாகவே தோன்றியது.  மகரிஷியை சந்திப்பதில் ஆர்வமில்லதிருந்த என்னை அவரை நோக்கி செலுத்தி விடுவதில் மனித சக்தியை மீறிய விதியின் கருவிகளாக இரு காஷாயமணிந்த மனிதர்கள் அமைந்த காரணம் என்ன?  வேறு தகுந்த சொல் கிட்டாததால் விதி என்று சொல்கிறேனே தவிர இந்தச் சொல்லை பொதுவான பொருளில் இங்கு எழுதவில்லை.  எந்த முக்கியத்துவமும் இல்லாத சில நிகழ்ச்சிகள் ஒரு சில சமயம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக திருப்பு முனையாக அமைவதைப் பழைய அனுபவங்கள் எனக்கு நன்கு உணர்த்தி இருக்கின்றன.

நாங்கள் ரயில் வண்டியை விட்டு இறங்கினோம்.  அத்துடன் மெயின் லைன் பயணம் முற்று பெற்றது.  இனி கிளை லைனில் போகவேண்டும்.  பிளாட்பாரத்தில் அரை இருட்டான காத்திருக்கும் அறையில் இரண்டு மணி நேரம் ரயிலுக்காக காத்திருந்தோம்.  எனது சகபயணி துறவியாரோ வெளியே நல்ல இருட்டாகவிருந்த பிளாட்பாரத்தில் முன்னும் பின்னுமாக நடை போட்டார்.  அவரது நெடிய உருவம் விண்மீன்களின் மங்கிய வெளிச்சத்தில் பாதி நிஜமாகவும் பாதி நிழலாகவும் தோற்றமளித்தது.  மிகவும் தாமதித்து ரயில் வண்டி ஒருவழியாக வந்து சேர்ந்தது.  குபுகுபுவென்று புகை விட்டுக் கொண்டு, எங்களை ஏற்றிக்கொண்டு கட கட வென்று உருண்டது.  எங்கள் பெட்டியில் இருந்த பயணிகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.

கண்ணை மூடினேன்.  தூக்கமும், கனவுமாக மாறி மாறி வந்தன.  சில மணி நேரங்களுக்குப்பின் எனது சகபயணி என்னை எழுப்பினார்.  எதோ ஒரு சிறிய ரயில் நிலையத்தில் வண்டி நின்றது.  இறங்கினோம். கூவென்று ஊளையிட்டுக் கொண்டு அமைதியான இருட்டைக் கிழித்துக் கொண்டு ரயில் சக்கரங்கள் உருண்டு ஓடின.  இரவு முற்றும் முடியவில்லை.  ஸ்டேஷனில் சிறிய காத்திருக்கும் அறைக்கு சென்றோம்.  யாரும் இல்லை.  சௌகர்யத்திற்கு வேண்டிய சாதனம் ஏதுமில்லை.  அங்கிருந்து சிறிய மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றி வைத்துப் பொறுமையுடன் காத்திருந்தோம்.

பொழுது விடிவதின் அறிகுறிகள் தென்பட்டன.  பின்புற ஜன்னல் வழியாக கண்ணுக்குத் தெரிந்த பகுதிகளைப் பார்த்தேன்.  காலைப் பனியின் திரை வழி தூரத்தில் தனித்து நிற்கும் ஒரு குன்றின் வரிவடிவம் தெரியத் தொடங்கியது.  அடிப்பாகம் மிக விஸ்தாரமாகவும், நடுப்பாகம் நன்கு பரந்தும் இருந்தது.  அதிகாலைப் பனியால் மறைக்கப்பட்டிருந்த குன்றின் சிகரத்தைக் காண முடியவில்லை.

என்கூட வந்த துறவி வெளியே போய்ப் பார்த்து வரக் கிளம்பினார்.  அங்கே ஒருவர் தனது இரட்டைக் காளை மாட்டு வண்டியில் படுத்துக் குறட்டை விடுவதைக் கண்டார்.  சற்று குரல் கொடுத்ததும் வண்டிக்காரர் விழித்து, கிராக்கி தயாராக இருப்பதை உணர்ந்தார்.  நாங்கள் போக விரும்பிய இடத்தைச் சொன்னதும் அவர் மிகுந்த உற்சாகத்துடன் சம்மதித்தார்.

அந்த சிறிய இரண்டு சக்கர வண்டியையும் அதன் உட்பகுதியையும் பார்த்த எனக்கு நம்பிக்கை எழவில்லை.  வந்தது வரட்டும் என்று நாங்கள் ஏறி உட்கார்ந்ததும் எங்களுக்குப் பின்னால் வண்டிக்காரர் எங்களது சாமான்களைத் திணித்தார்.  ஒரு மனிதரால் எவ்வளவு குறுகிய இடத்தில் அமர முடியுமோ அவ்வளவு ஒண்டிக் கொண்டு அமர்ந்தார் துறவி.  தலை இடித்து விடாமலிருக்க கூனிக் குறுகிக் கொண்டு வெளியில் காலைத் தொங்க விட்டவாறு வண்டியின் பின்பகுதியில் அமர்ந்தேன்.  இடப் பிரச்சினை ஓரளவு சமாளிக்கப் படவே, "கிளப்புங்கள்" என்றோம்.

வண்டியில் பூட்டியிருந்த மாடுகள் சிறியவன ஆனாலும் வலுவானவை.  இருந்தாலும் வண்டியின் வேகம் குறைவுதான்.  மாடுகள் குஷியுடன் புழுதி படர்ந்த ரஸ்தாவில் சென்றன.  சட்டெனப் பொழுது விடிந்ததை உணர்ந்தேன்.

ரயில் நிலையத்தின் காத்திருக்கும் அறையில் இருந்து நான் கண்ட மலையின் அடிவாரத்தை வண்டி நெருங்கிய போது பிரகாசமான காலச் சூரிய ஒளியில் அச் செம்மலை பிரம்மாண்டமாகத் தோற்றமளித்தது.  பனி நீங்கி விட்டதால் மலை உச்சியையும் அதன் பின் நீல வானையும் காண முடிந்தது.  அது ஒரு மலைத் தொடர் அன்று.  செம்மலை, பழுப்பு பாறைகளினாலான ஒரு மாபெரும் குன்றே அது.  தனித்து நிற்கும் குன்றின் சரிவில் பெரும்பான்மையான இடங்களில் செடி கொடி ஏதுமில்லை.  அங்குமிங்குமாக பாறைகள் ஏராளமாகச் சிதறிக் கிடந்தன.

என் பார்வை செல்லும் திக்கை கவனித்த துறவி "இதுதான், அருணாசலம்! புனிதமான செம்மலை!" என்றார்.  இதைக் கூறும்போது அவரது முகத்தில் பக்தியின் பரவசம் படர்ந்தது.  அக்கணத்தில் அவரைப் பார்த்த பொழுது பழங்காலத்து கிறிஸ்தவ அடியார்கள் மெய்மறந்து நிற்கும் படங்கள் நினைவுக்கு வந்தன.

"அருணாசலம் என்றால் என்ன?" என்றேன்!

குருவின் திருவடி தொடரும்.....