Monday 26 March 2012

தெளிவு குருவின் திருவடி!


ஒரு மெல்லிய போர்வையைத் தரை மீது விரித்து அதன் மேல் சோபாவில் சிலைபோன்று வீற்று இருந்த மோன உருவத்தை ஆவலுடன் நோக்கினேன்.  அகலம் குறைவான மெல்லிய கோவணத்தைத் தவிர வேறு ஆடை எதுவும் மகரிஷிகளின் உடல் மீது இல்லை.  ஆனால் இந்த பிரதேசங்களில் இது ஒன்றும் அசாதாரணமில்லை.  மகரிஷிகளின் சருமம் சற்றே செப்பு நிறமாக இருப்பினும் தென் இந்தியர்களைப் பார்க்கும் பொழுது அவர் நல்ல சிகப்பு என்றே சொல்லலாம்.  அவர் நல்ல உயரமென்றும் வயது ஐம்பதிர்க்குச் சற்று கூடுதலாக இருக்குமென்றும் தோன்றியது.  நரைமுடியுடைய அவரது சிரத்தின் அமைப்பு நல்ல திருத்தமாக இருந்தது அவரது தோற்றத்திற்கு அது ஒரு சீரிய சிந்தனையாளரின் பொலிவைத் தந்தது.  மொத்தத்தில் அங்க அமைப்பில் அவர் இந்தியர்களைக் காட்டிலும் ஐரோப்பியர் போன்றே காணப்பட்டார்.

ஹாலில் பூரண மௌனம் நிலவியது.  அமைதியே உருவாகச் சலனமேதுமின்றி நாங்கள் உள்ளே நுழைந்ததே தெரியாதோ என்னும்படி அந்த மாமுனிவர் அமர்ந்திருந்தார்.  சோபாவின் மறுபக்கத்தில் அன்பரொருவர் தரை மீது உட்கார்ந்திருந்தார்.  முனிவருக்கு மேலே கட்டி இருந்த காக்கித் துணியால் தைக்கப்பட்ட பங்காவை இந்த அன்பர் கயிற்றினால் இழுக்கத் தொடங்கினார்.  அது எழுப்பிய ஓசை அங்கு நிலவிய மௌனத்தைக் கலைத்தது.  பங்காவின் கிர் கிர் என்ற தாளத்தை கேட்டவாறே சோபா மீதிருந்த மகரிஷியின் கண்களின் மீது எனது கண்களை ஆவலுடன் பதித்து அவர் என்னைப் பார்ப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தேன்.  மிகப் பெரியதுமில்லாமல் சிறிதாகவும் இல்லாமல் பாந்தமாகவும், கரும்பழுப்பு நிறமாக் இருந்த அவரது கண்கள் அகலத் திறந்திருந்தன.

நான் வந்திருப்பது அவருக்குத் தெரியுமோ, தெரியாதோ, அதற்கான அடையாளம் ஏதும் மகரிஷிகளிடம் காணப்படவில்லை.  எந்த அசைவுமின்றி ஒரு அமானுஷ்ய அமைதியுடன், சிலையைப் போல் வீற்றிருந்தார்.  வெகு வெகு தொலைவை நோக்கி கால தேசங்களை வெட்டவெளியைக் கடந்த ஆனந்தமான ஒரு சேய்மையை தாண்டி அவரது பார்வை சென்றது.  நான் அவரது பார்வையில் படவில்லை.  இந்த அசாதரணமான காட்சியைப் போன்று எங்கேயோ ஒருமுறை பார்த்தது போலிருந்தது.  என் நினைவுப் பெட்டியை குடைந்தேன்.  இதுவரை கண்டவர்களை எல்லாம் ஒவ் ஒருவராக ஆராய்ந்தேன்.  கல்லில் செதுக்கியதுபோல் அசைவேதுமின்றி அமர்ந்திருந்த "பேச முனிவர்" நினைவுக்கு வந்தார்.  சென்னைக்கருகே ஒரு ஒதுக்குப் புறமான குடிசையில் கண்டேனே அந்த மௌனி.  இப்பொழுது மகரிஷியிடம் நான் காணும் அபூர்வமான தேகச் சலனமின்மை அந்த மௌனியின் சிலை போன்ற தன்மையை வினோதமான வகையில் ஒத்துள்ளது.

ஒரு மனிதருடைய கண்களின் மூலம் அவரது உள்ளக்கிடக்கையை அறிந்து பட்டியல் போட்டு விடலாமென நான் பல்லாண்டுகளாக நம்பி வந்துள்ளேன்.  ஆனாலோ, மகரிஷிகளின் முன்னர் நான் தயங்கித் திகைத்து வியந்து நின்றேன்.

சொன்னால் நம்ப முடியாத நிதானத்துடன் நிமிடங்கள் ஊர்ந்து சென்றன.  இப்படியாக அரை மணி நேரம் சென்றதை சுவற்றில் தொங்கிய ஆஸ்ரம கடிகாரம் அறிவித்தது.  இன்னும் நத்தை வேகத்தில் நேரம் ஊர்ந்து ஒரு மணி நேரம் கடந்தது.  யாருமே வாய் திறக்கவில்லை.  எனது கவனம் சோபாவில் மௌனமாக அமர்ந்திருந்த மகரிஷிகளிடம் ஒருமுகப்பட்டு விடவே அவரைத் தவிர அங்கிருந்த மற்ற எல்லோரையும் நான் முற்றிலும் மறந்து விட்டேன்.  அவர் முன்னிருந்த அழகிய சிறு மேஜை மீது நான் வைத்த பழங்கள் கவனிப்பாரின்றி இருந்தது.

சென்னையில் நான் பேசா முனிவரை சந்தித்தபோது எனக்கு கிடைத்த வரவேற்ப்பு போன்றே தமது குருநாதரிடமும் கிடைக்குமென்று என்னுடன் துணை வந்த துறவியார் முன்னரே எச்சரிக்கவில்லை ஆதலால், பூரண உதாசீனம் போல் தோன்றிய இந்த வினோதமான வரவேற்ப்பு எனக்குத் திகைப்பூட்டியது.  இந்தச் சூழ்நிலையில் எந்த மேற்கத்தியனும் "பக்தர்கள் கண்டு ரசிப்பதர்க்காகத்தான் இந்த மனிதர் இப்படி நாடகம் போடுகிறாரோ?" என்று தான் முதலில் நினைப்பான்.  இதே நினைப்பு ஓரிரு முறை என்னுள் எழவே செய்தது.  ஆனால் உடனேயே அதை உதறி விட்டேன்.  மகரிஷிகளுக்கு சமாதி நிலையில் ஆழ்ந்துவிடும் பழக்கமுண்டு என்று துறவியார் என்னிடம் கூறியிராதிருந்தாலும் அவர் நிச்சயமாக சமாதியில்தான் இருக்கிறார் என்று நினைத்தேன்.  அடுத்தபடியாக "பார்மார்த்திகமான இந்தத் த்யானம் வெறும் பொருள் அற்ற சூன்ய நிலை தானோ?" என்ற எண்ணம் எழுந்த கொஞ்ச நேரம் நிலைத்தது.  ஆனால் இதற்கு விடை கிடைக்காத காரணத்தினால் மட்டுமே இந்த எண்ணத்தையும் விட்டு விட்டேன்.

காந்தம் இரும்பைக் கவர்வதுபோல் இந்த மனிதரிடமுள்ள ஏதோ ஒரு சக்தி என் கவனத்தை ஈர்க்கிறது.  எனது பார்வையை அவரைவிட்டு அகற்ற இயலவில்லை இந்த அபூர்வமான ஈடுபாடு மென்மேலும் வலுப்படவே என்னை எறேடுத்துக்கூடப் பாராமல் உதாசீனமாக இருந்தது குறித்து எனக்கு ஏற்பட்ட  ஆரம்பத் திகைப்பும், குழப்பமும் மெல்ல மெல்ல மறைந்தன.  இந்த அதிசயமான காட்சி ஒரு மணி நேரம் நீடித்து இரண்டாவது மணி நேரம் கடந்து கொண்டிருக்கும் பொழுது தான் நான் எனது மனதினுள்  ஒரு அமைதியான எதிர்ப்பில்லாத மாறுதல் மௌனமாக திகழ்ந்து கொண்டிருப்பதை உணரத் துவங்குகிறேன்.  ரயிலில் வரும்போது மிகுந்த சிந்தனையுடனும் நுட்பகாகவும் திருத்தமாகவும் தயாரித்த கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக நழுவி மறைந்தன.  இப்பொழுது எனக்கு அக்கேள்விகளக் கேட்டாலும் கேட்க்காவிட்டாலும் ஒன்றுதான்.  இதுவரை என்னைத் தொந்தரவு செய்த பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் எனக்கு பரவாயில்லை.  எனக்கு தெரிந்ததெல்லாம் ஒன்று தான்; அமைதி என்னருகே ஆறாகப் பெருகி ஓடிக் கொண்டிருக்கிறது; மகத்தான சாந்தி என் இதயத்தினுள் ஆழப் பாய்ந்து பரவுகிறது; சிந்தனைகளால் சித்திரவதைப்பட்ட எனது மூளை ஒரு வழியாகச் சற்று ஓய்வு பெறத் துவங்குகிறது.

இவ்வளவு காலமாக கிளிப்பிள்ளை பேசுகிறதுபோல் நான் திரும்ப திரும்ப என்னிடமே கேட்டுக் கொண்டிருந்த அந்தக் கேள்விகளை நினைத்தால் சிரிப்பு வருகிறது.  அவற்றைக் கேட்க்காமலேயே இவரிடமிருந்து நொடிப் பொழுதில் விடைகள் கிடைத்து விடுகின்றனவே.  நான் வாழ்ந்த வாழ்வும், கண்ட காட்ச்சிகளும் இங்கு எவ்வளவு சிறியனவாகத் தோன்றுகின்றன!  இங்கே எனக்குத் திடீரென்று ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.  மனிதனின் புத்தி தனக்குத்தானே பிரச்சினைகளை உருவாகிக் கொண்டு, இல்லாத அப்பிரச்சினைகளுக்குப் பரிகாரம் காண்பதில் பேரல்லப் படுகிறது.  இதுவரை புத்தியே பிரதானமெனக் கருதி வந்த என்போல் ஒருவன் மனதில் இத்தகைய புதிய கருத்து புகுவது விந்தையே.

இவ்வாறு நிதானமாக், நிலையாக வலுப்பட்டு வந்த ஆழ்ந்த மன அமைதி என்னை ஆட்கொள்ள விட்டேன்.  இரண்டு மணி நேரம் இந்தச் சரணாகதியில் கழிந்தது.  காலவிரயமாகிறதே, காலம் கடந்து செல்கிறதே என்று மனதில் எரிச்சல் உண்டாகவில்லை.  ஏனெனில் மனது தனக்குத் தானே சிருஷ்டித்துக் கொண்ட பிரச்சினச் சங்கிலிகள் உடைத்து எறியப்படுவதை உணர்கிறேன்.  பிறகு மெல்ல மெல்ல, எனது நனவு மண்டலத்தில் ஒரு புதிய கேள்வி படர்கிறது.

மகரிஷி எனப்படும் இவர் ஆன்ம அமைதியைப் பரப்புவது ஒரு மலர் தனது இதழ்களிலிருந்து நறுமணத்தை வெளியே பரப்புவது போல் அவ்வளவு இயல்பானதா?  என்னால் ஆன்மீகத்தைப் புரிந்து கொள்ள முடியுமென்று நான் கருதவில்லை.  ஆனால் பிறருடைய சக்தியை, தகுதியை என்னால் உணர முடிகிறது.  என்னுள்ளே அறிவுக்கெட்டாத சூட்சமமான வகையில் அமைதி பரவுவதற்கு நான் இப்பொழுது இந்த இடத்தில் இருப்பதுதான் காரணம் என்று என் மனதில் ஒரு சந்தேகம் உதிக்கிறதென்றால் நான் மகரிஷியின் சாந்நித்ய சக்தியை என் இதயத்தினுள் புரிந்து கொள்ளத் துவங்கி விட்டேன் என்றே பொருள்.  துன்புற்றுக் குழம்பிக் கொந்தளிக்கும் எனது உள்ளத்தில் பாய்ந்து பரவும் அமைதி எதோ ஒரு அணுக்கதிர் போன்ற ஆன்மீக சக்தியால், இந்த்ரியங்களுக்கப்பாற்பட்ட யாருமறியாத ஒரு சூட்ச்சுமச் சக்தியால் இவரிடமிருந்துதான் கிளம்பி என்னை அடைகிறதோ என்று என்னுள் வியப்பு எழுந்தது.  ஆனால் இந்த மனிதரோ நான் ஒருத்தன் இருப்பதே தெரியாதவர் போல் முழுக்க முழுக்க ஒரு சிலயைப்போல் அமர்ந்திருக்கிறாரே.

 அந்த மோனக் கடலில் முதன் முதலாக ஒரு சிற்றலை எழுந்தது.  யாரோ ஒருவர் என்னிடம் வந்து என் காதில் மென்குரலில் கேட்டார்" "மகரிஷிடளிடம் கேள்வி கேட்க விரும்பினீர்கள் இல்லையா?"

நிமிர்ந்து பார்த்தேன்!

குருவின் திருவடி ...... தொடரும்!

No comments:

Post a Comment